குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் தமிழகத்தை ஆசியாவின் தலைநகராக மாற்றும் வகையில் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும் : முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு
Aug 31 2015 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டில், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வரும் நிலையில், ஆசியாவிலேயே இந்த நிறுவனங்களின் தலைநகரமாக தமிழ்நாட்டை உருவாக்கிட ஏதுவாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். இந்த நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடித் தொழில் வளாகம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, பேரவை விதி எண் 110-ன் கீழ், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உரையாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழகத்தில் தமது தலைமையிலான அரசின் தொலைநோக்குக் கொள்கைகள், மக்களின் தொழில் புரியும் மனநிலை ஆகியவை காரணமாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வரும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுடன் 11 லட்சம் நிறுவனங்கள் செயல்படுவதாகத் தெரிவித்தார். இந்த நிறுவனங்களுக்கான புதிய தொழிற்கொள்கையானது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு தீர்வு காண்பதுடன், தொலைநோக்குப் பார்வை 2023-ன் குறிக்கோளினை எளிதாக அடையவும் வழிவகுக்கும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.