வடசென்னை வியாசர்பாடி பாலப் பணிகள் 83 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், வரும் அக்டோபர் மாதம் பாலத்தின் ஒரு பகுதி பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும் : சட்டப்பேரவையில் தகவல்
Aug 31 2015 10:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடசென்னை வியாசர்பாடி பாலப் பணிகள் 83 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், வரும் அக்டோபர் மாதம் பாலத்தின் ஒரு பகுதி பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும் என்றும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மின்துறை அமைச்சர் திரு.நத்தம் R.விசுவநாதன் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், காரைக்குடி தொகுதி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக 100 K.V.A. திறன்கொண்ட மின்மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2 வார காலத்தில் பணிகள் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிச்சாமி, வடசென்னை வியாசர்பாடி பாலப்பணிகளில் 83 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், வரும் அக்டோபர் மாதம் பாலத்தின் ஒரு பகுதி பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என்றும், ரயில்வே பணிகள் முற்றிலும் முடிவடைந்த பின்னரே, பாலப்பணிகள் முழுவதும் நிறைவடையும் என்றும் குறிப்பிட்டார்.
ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.ப.மோகன், கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், கரூர் மாவட்டம் புஞ்சை ஆலாக்குறிச்சி பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 2014-15-ல் ஆணை பிறப்பித்து, அதன்படி, 52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதற்கு வசதியாக தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் 30 பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுடன் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி மேலும் 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, மொத்தம் 41 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.P. பழனியப்பன் பேரவையில் குறிப்பிட்டார்.