தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உயிரிழந்த 13 பேரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக கடந்த மே மாதம் 12-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. பிச்சநாயக்கர் என்பவரின் மனைவி மாரியம்மாள்;
கடந்த மே மாதம் 15-ம் தேதி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், நறுவெளி களப்பால் கிராமத்தைச் சேர்ந்த திரு. வடுகன் என்பவரின் மகன் தங்கராசு;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கொங்கராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி கஸ்தூரி மற்றும் மகள் சாந்தாகுமாரி;
திண்டிவனம் வட்டம், மொளசூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. பெரியசாமி என்பவரின் மகன் ரங்கநாதன்;
உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தமங்கலம் மஜ்ரா, மாரனோடை கிராமத்தைச் சேர்ந்த திரு. ரங்கசாமி என்பவரின் மகன் பெத்துரெட்டியார்;
கடந்த மே மாதம் 16-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஊடேதுர்க்கம் தரப்பு, யு.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திரு. குர்ரப்பா என்பவரின் மகன் வெங்கடசாமி ஆகியோரின் மறைவுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மே மாதம் 16-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து நாட்டுப் படகில் கடலில் மீன் பிடிக்கும் பணியை மேற்கொண்டிருந்த மணமேல்குடி வட்டம், தெற்குப்புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் திரு, சண்முக சுந்தரம் மற்றும் திரு. கருப்பையா;
கடந்த மே மாதம் 17-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பொன்பத்தி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஷர்மிளா; திருக்கோவிலூர் வட்டம், சோழவாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஏழுமலை என்பவரின் மனைவி பூங்காவனம்;
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஓரிவயல் பிரிவு, பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. மலைப்பாண்டி என்பவரின் மகன் கலைமுருகன்;
கடந்த மே மாதம் 19-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம். பூதப்பாண்டி கிராமம், கலுங்குடி பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடியைச் சேர்ந்த திரு. மணி என்பவரின் மகன் மந்திரமூர்த்தி என்கிற முருகன்; ஆகியோர் இடி, மின்னல் தாக்கியதால் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.