தமிழகத்தில் சில உதிரிக்கட்சிகள் இன்று விடுத்துள்ள பந்த் போராட்டத்தை பொதுமக்கள் முழுமையாக நிராகரித்து விட்டனர். அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. மக்கள் தங்கள் பணிகளை எந்த வித தொய்வும் இன்றி மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழகத்திற்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அரசின் மீது குறைசொல்ல இயலாத சில கட்சிகள், மதுவிலக்கு போராட்டத்தை வேண்டுமென்றே நடத்தி தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கி வருகின்றன. மதுவின் துணை கொண்டு மாநாடு போன்றவற்றை நடத்தி வரும் உதிரிக்கட்சிகள் இன்று பந்த் போராட்டத்திற்கு விடுத்துள்ள அழைப்பை பொதுமக்கள் நிராகரித்துவிட்டனர். சென்னை நகரில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் பேருந்துகள் இயங்குகின்றன. மக்கள் அலுவலகங்களுக்கு எவ்வித சிரமமுமின்றி செல்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்துக்கடைகளும், திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன.
திருச்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி, தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி - கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து, வாடகைக் கார், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அரசியல் ஆதாயத்திற்காக கடைகளை அடைக்கச் சொல்லி சிலர் வணிகர்களை அச்சுறுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, பாதுகாப்பு கருதி, போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், வழக்கம் போல அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாததால், பொதுமக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூரில் வழக்கம் போல் பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி முழுவதும் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பனியன் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் தொழிலாளர்கள் காலை முதலே தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கன்னி, நாகூர், மயிலாடுதுறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாததால், பொதுமக்கள் அன்றாடப் பணிகளில் வழக்கம் போல ஈடுபட்டு வருகின்றனர். ஆன்மீகத் தலங்கள் நிறைந்த நாகை மாவட்டத்தில், உள்ளூர் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் எவ்வித சிரமமுமின்றி, வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில், அனைத்து கடைகளும் வழக்கம் போல காலை முதலே திறந்திருந்தன. பள்ளி - கல்லூரி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்காததால், பொதுமக்கள் வழக்கம் போல தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மாநிலம் முழுவதும் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காலை முதலே இயக்கப்பட்டு வருகின்றன. சமூக விரோதிகளால், வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், மாநிலம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.