கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் படைகள் டச்சுப்படைகளை தோற்கடித்ததன் 275வது ஆண்டு வெற்றிதினம் : ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Jul 31 2015 6:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் திருவிதாங்கூர் படைகள் டச்சுப்படைகளை தோற்கடித்ததன் 275வது ஆண்டு வெற்றிதினம் இன்று கொண்டாடப்படுகிறது.
கடந்த 1741ம் ஆண்டு கடல் மார்க்கமாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரையை வந்தடைந்த டச்சுக்காரர்கள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தை கைப்பற்றும் முனைப்பில் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டினர். இதனை அறிந்த திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, போருக்கு அவகாசம் குறைவாக இருந்ததால் குளச்சல் கடற்கரை நெடுகிலும் ஏராளமான மாட்டுவண்டிகளை நிறுத்தி, அவற்றின் மீது பனை மரங்களை சாய்த்து வைத்தார். கடலில் வந்து கொண்டிருந்த டச்சுக்காரர்களுக்கு அவை பீரங்கிகள் போல் புலப்பட்டதால் அவற்றை உண்மை என நம்பிய அவர்கள் திருவிதாங்கூர் படைகளிடம் இதே நாளில் சரணடைந்தனர். இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 275 ஆண்டுகள் ஆகின்றன.
இதனை நினைவுகூரும் வகையில் குளச்சல் கடற்கரைப் பகுதியில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. மேலும் அங்கு போர் சம்பவங்கள் தொடர்பான ஓவியக்கண்காட்சிக்கும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், டாக்டர் அப்துல்கலாமின் மறைவையொட்டி, அங்கு இன்று நடைபெற வேண்டிய வெற்றிதின ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் வரும் 2ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.