மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாமின் உடல், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில், 7 அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஏவுகணை நாயகன், அணு விஞ்ஞானி என போற்றப்படும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J.அப்துல்கலாமின் உடல், விமானம் மூலம் ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு, பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் நேற்று முழுவதும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பிரத்யேக மேடையில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் கலாமின் உடலுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. நத்தம் இரா. விஸ்வநாதன், திரு. ஆர். வைத்திலிங்கம், திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, திரு. P. பழனியப்பன், டாக்டர். S. சுந்தரராஜ், திரு. R.B. உதயகுமார் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர்கள் திரு.வெங்கய்யநாயுடு, திரு.மனோகர் பரிக்கர், திரு. பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் டாக்டர் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். இஸ்லாம் முறைப்படி, சிறப்புத் தொழுகை மேற்கொண்ட ராமேஸ்வரம் இஸ்லாமியர்கள், அப்துல் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். டாக்டர். கலாமின் மூத்த சகோதரர் திரு. முத்துமீரா மரைக்காயர் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பெருந்திரளான பெண்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் அப்துல்கலாமின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு டாக்டர் கலாமின் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்றுகாலை பெரிய பள்ளி வாசலில் தொழுகைக்குப் பின்னர், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் முப்படை வீரர்கள் புடை சூழ, அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. வழிநெடுகிலும் திரளான மக்கள் கூடி நின்று, கலாமுக்கு இறுதியஞ்சலி செலுத்தினர். சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கச்சிமடம் பேய்கரும்பு என்ற இடத்தில் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கான அரசு நிலம், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் நல்லடக்கத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை தமிழக அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு, நல்லடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், தங்கச்சிமடம் பேய்கரும்பு என்ற இடம் வரை வழிநெடுகிலும் திரளான பொது மக்கள் கூடி நின்று, மலர் தூவி கலாமுக்கு இறுதியஞ்சலி செலுத்தினர். ராணுவ இசையுடன், முப்படை வீரர்கள் அணிவகுத்துச் செல்ல கலாமின் உடல் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பிரத்யேக மேடையில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் கலாமின் உடலுக்கு, பிரதமர் திரு.நரேந்திரமோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா சார்பில், அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. நத்தம் இரா. விசுவநாதன், திரு. ஆர். வைத்திலிங்கம், திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, திரு. P. பழனியப்பன், டாக்டர். எஸ். சுந்தரராஜ், திரு. R.B. உதயகுமார் ஆகியோர், டாக்டர் அப்துல் கலாமின் உடலுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முப்படைத் தளபதிகள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர். பின்னர் முழு ராணுவ மரியாதையுடன், 21 முறை குண்டுகள் முழங்க அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். மறைந்த தலைவருக்கு அவர்கள் சோகத்துடன் பிரியாவிடை கொடுத்தனர்.
முன்னதாக, டாக்டர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த பிரதமர் திரு.நரேந்திரமோடியை, மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜு, மாநகராட்சி மேயர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.