முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவுக்கு, தமிழகம் முழுவதும், பொதுமக்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டாக்டர் அப்துல்கலாமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரத்தில், திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்களும் தங்கள் மனங்களில் நிறைந்த அப்துல்கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
டாக்டர் அப்துல் கலாமின் மறைவுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு இசைப் பள்ளி மற்றும் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நாதஸ்வரம், மிருதங்கம் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் செங்கோட்டையில் ஆயிரக்கணக்கான பள்ளி, மாணவ, மாணவிகள் டாக்டர் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு, மவுன ஊர்வலம் நடத்தினர்.
நாமக்கல் நகராட்சி சார்பில், அதிகாரிகள், அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் டாக்டர் அப்துல்கலாமுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள், டாக்டர் அப்துல்கலாமின் உருவப்படத்தை ஏந்தி, மவுன ஊர்வலம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
விருதுநகரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், சாத்தூர் அரசுப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடியில், 5 ஆயிரம் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகைச் சேர்ந்த 25 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல், டாக்டர் அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், டாக்டர் அப்துல் கலாம் திருவுருவப் படத்திற்கு மோட்ச தீபம் ஏற்றி, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
டாக்டர் அப்துல் கலாம் மறைவையொட்டி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் முன்பாக உள்ள 16 கால் மண்டபத்தில் தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் மோட்ச தீபம் ஏற்றி இசை அஞ்சலி செலுத்தினர்.
திருவண்ணாமலையில், டாக்டர் அப்துல் கலாம் திருவுருவப் படத்திற்கு அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவை நனவாக்குவோம் என சபதம் ஏற்றனர்.
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களும், அரசு அலுவலகங்களின் ஊழியர்களும், டாக்டர் அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அரசுக்கல்லூரி சார்பில் நடைபெற்ற அமைதி பேரணியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள கல்லூரியில் மாணவர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, டாக்டர் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வணிகர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலம் சென்றனர்.
டாக்டர் அப்துல்கலாமின் மறைவையொட்டி, நாகை மாவட்டத்தில் மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்கு செல்வதில்லை என முடிவு செய்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அக்கரைப்பேட்டை அரசுப்பள்ளி மாணவர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாகச் சென்று அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறையை அடுத்த வடகரையில், ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற அமைதிப் பேரணி மற்றும் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம் சோழபுரம், பந்தநல்லூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மவுன ஊர்வலம் சென்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில், பள்ளி மாணவ-மாணவியர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்ணீருடன் மவுன ஊர்வலம் நடத்தினர்.
திருவள்ளூரில் தனியார் பள்ளி ஒன்றில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருத்தணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர் அப்துல் கலாம் உருவப்படத்தை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் மௌன ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.
வேலூரை அடுத்த திருமலைகோடியில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் அமைதி ஊர்வலம் நடத்தி, டாக்டர் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரியில் டாக்டர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கோவையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் கலாமின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் பள்ளி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் அஞ்சலி செலுத்தியதுடன், டாக்டர் அப்துல் கலாம் நினைவாக மரக்கன்றுகளை நட்டனர்.
தருமபுரியில் டாக்டர் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு கல்லூரி மாணவ, மாணவியர் மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சை திலகர் திடல் பகுதியிலிருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்ற அமைதி ஊர்வலம், காந்திஜி சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ரயிலடி சென்றடைந்தது. அங்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு, அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரியில் 500-க்கு மேற்பட்ட மாணவர்கள், உப்பளம் பகுதியிலிருந்து தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயம் வரை மவுன ஊர்வலம் சென்று சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இதேபோன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளிலும், பொதுமக்கள், மாணவ-மாணவியர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.