மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில், தமது சார்பிலும், தமிழக அரசு சார்பிலும், அமைச்சர்கள் கலந்துகொண்டு, இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கலாம் மீது தமக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு என்றும், கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்த வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றாலும், உடல்நிலை காரணமாக பங்கேற்க இயலவில்லை என்றும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரும், விஞ்ஞானிகள், இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் என அனைவராலும் போற்றப்பட்டவரும், அனைவரது நெஞ்சில் நிறைந்தவரும், தமிழகத்தின் தலைசிறந்த மைந்தருமான பாரத ரத்னா டாக்டர் A.P.J. அப்துல் கலாமின் மறைவினால், தாம் மிகுந்த மனவேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை குடும்பத்தில் பிறந்து, உன்னத நிலையை அடைந்தவர் டாக்டர் அப்துல் கலாம் - எதையும் விஞ்ஞானப் பார்வையுடன் அணுகிய டாக்டர் அப்துல் கலாம், இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம்பெற உந்து சக்தியாக விளங்கினார் - ஏவுகணை உருவாக்கம், அணுசக்தித் திட்டங்கள் ஆகியவற்றில், அவருக்கு மிகுந்த பங்களிப்பு இருந்தபோதிலும், போலியோ பாதித்தவர்களுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் கருவி ஆகியவற்றை உருவாக்கியதில் மனநிறைவு கண்டவர் திரு. அப்துல் கலாம் - "நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் - ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்" என்ற அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் திரு. அப்துல் கலாம் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார்.
திரு. அப்துல் கலாமின் நல்லடக்கம், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற உள்ளது - அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமது உத்தரவின்பேரில், இதற்கென அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது - திரு. A.P.J. அப்துல் கலாம் மீது தமக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு - எனவே, அவரது இறுதிச் சடங்கில் பங்குகொண்டு தமது மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் - இருப்பினும், தமது உடல்நிலை காரணமாக, தம்மால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை - எனவே, தமது சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும், நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர். எஸ். சுந்தரராஜ் மற்றும் வருவாய் துறை அமைச்சர் திரு. R.B. உதயகுமார் ஆகியோரை ராமேஸ்வரம் சென்று, திரு. அப்துல் கலாமுக்கு இறுதி மரியாதை செலுத்த தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மறைந்த திரு. அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அன்னாரது இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான இன்று அரசு விடுமுறை அளிக்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.