முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நாளை முழு ராணுவ மரியாதையுடன் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்கு மாநிலமான மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில், I.I.M. கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே நேற்று முன்தினம் மாலை உரையாற்றிக் கொண்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல்கலாம், திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி அவர் உயிர் பிரிந்தது.
டாக்டர் அப்துல் கலாம் மறைவுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல்கலாம் மறைவையொட்டி, வரும் 2-ம் தேதி வரை, தமிழகத்தில், ஒருவார காலத்திற்கு அரசுமுறைத் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷில்லாங்கில் இருந்து டாக்டர் அப்துல் கலாமின் உடல், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்திக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர், கவுஹாத்தியிலிருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் டெல்லி பாலம் விமானநிலையம் கொண்டுவரப்பட்ட டாக்டர் அப்துல் கலாம் உடலுக்கு முப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஹமீது அன்சாரி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள், மத்திய அமைச்சர்கள், ராணுவ உயர்அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள டாக்டர் அப்துல் கலாமின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடலுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு. S.T.K. ஜக்கையன், கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டாக்டர் P. வேணுகோபால், கழக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திரு. A. நவநீதகிருஷ்ணன் மற்றும் அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 47 பேரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவ-மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று அப்துல்கலாமின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
டாக்டர் அப்துல் கலாமின் உடல், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு இன்று காலை மதுரைக்கு விமானப்படை விமானத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்துல் கலாமின் உடலுடன் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிகர் ஆகியோர் சென்றுள்ளனர். மதுரை விமான நிலையத்தில் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலாமின் உடல் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்படுகிறது.
ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள கீழக்காடு என்ற இடத்தில் டாக்டர் அப்துல் கலாமின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர், ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது உடல் நல்லடக்கம், நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கினையொட்டி ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.