விழுப்புரம் அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் உட்பட, 4 பேர் பலி, 25 பேர் படுகாயம்
Jul 4 2015 8:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பெண்கள் உட்பட, 4 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்து புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புதுச்சேரி வழியாக சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் காழங்காடு என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, திடீரென நிலைதடுமாறி ஒரு பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.