கோவை பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வனவிலங்குகளின் இறைச்சி மீட்பு - சட்டவிரோதமாக வேட்டையில் ஈடுபட்ட தொழிலதிபர் கைது
Jul 4 2015 6:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை அருகே ஓய்வுபெற்ற வன அதிகாரியின் பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளின் இறைச்சியை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாக வனவிலங்குகளை வேட்டையாடிய தொழிலதிபரை கைது செய்த வனத்துறையினர், அவரிடமிருந்து 4 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட வன அதிகாரி நாகராசன் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது மருமகனும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சத்தியநாதன், அடிக்கடி வந்து தங்குவது வழக்கம். இந்த வீட்டில், வேட்டையாடப்பட்ட மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் இறைச்சி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, வனச்சரகர் தினேஷ் தலைமையில், அதிகாரிகள், பண்ணை வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 14 கிலோ மான் மற்றும் காட்டுப்பன்றி இறைச்சியை கைப்பற்றிய வனத்துறையினர், தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த காட்டுக்கோழி, புணுகுப் பூனை மற்றும் மூன்று மான் கொம்பு உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடிய புகாரில் சத்தியநாதனை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்து வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட 4 துப்பாக்கிகள், 132 துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சத்தியநாதனிடம் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் அளித்த தகவலின் பேரில் பண்ணை வீட்டில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மேலும் முக்கிய புள்ளிகள் பலர் சிக்குவார்கள் என வனத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.