தமிழகத்தில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் புதிதாக 20 புதிய காவல்நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரம் : கடலோர காவல் குழுமம் தகவல்
Jul 4 2015 6:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் புதிதாக 20 புதிய காவல்நிலையங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கடலோர காவல் குழுமம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் தேங்காய்பட்டினத்தில் புதிதாக மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ள நிலையில், அங்கு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு சொந்தமான அதிவிரைவு படகை நிறுத்துவது தொடர்பாக, அதன் கூடுதல் டி.ஜி.பி. திரு. சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கிருந்து படகு மூலம் சின்ன முட்டம் வரை பயணம் மேற்கொண்டு, கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திரு. சைலேந்திர பாபு, தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, புதிதாக 20 காவல்நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், 20 புதிய அதிவிரைவு படகுகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு துறைமுகத்திலிருந்து 4 கடல் மைல் தொலைவில், கடலூர் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த 38 மீனவர்கள், விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, இயந்திர கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், படகு தீ பற்றி எரிய, மீனவர்கள் அனைவரும் கடலில் குதித்து கரைக்கு திரும்ப நீச்சலடித்து சென்றனர். அப்போது அந்த வழியாகச் சென்ற நாகை மாவட்டம் பழையாறு மீனவர்கள், 38 பேரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய விசைப்படகு சேதமடைந்து விட்டதாக உயிர்தப்பிய கடலூர் மீனவர்கள் தெரிவித்தனர்.