பொள்ளாச்சி அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சீரியல் துணை நடிகை ரம்யா, நண்பர் சந்திரசேகர் கைது - கோவை மத்திய சிறையில் அடைப்பு
Mar 28 2023 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீரியல் நடிகை ஒருவர் தனது நண்பனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கோவை மாட்டம் பொள்ளாச்சி அருகே நிகழ்ந்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பீளமேட்டை சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்குமுன் கருத்து வேறுபாடு காரணமாக பீளமேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார் ரம்யா. சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளதால், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் என்கிற சந்திரசேகருடன், ரம்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது 'சுந்தரி, 'கண்ணெதிரே தோன்றினாள்' ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார் ரம்யா.
இந்த சூழலில், தனது இரண்டு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தவித்த கணவர் ரமேஷ், பீளமேடு சென்று மனைவி ரம்யாவிடம் குழந்தைகளையும் தனது தாயையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு, ரமேஷ் வீட்டுக்கு ரம்யா குடிபெயர்ந்தாலும், நண்பர் டேனியல் உடனான தொடர்பு மட்டும் நீடித்துக் கொண்டே இருந்துள்ளது.
ஒருகட்டத்தில் தனது நண்பர் டேனியல் என்கிற சந்திரசேகரனிடம், தன் கணவர் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாகவும், அவரை கொலை செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார் ரம்யா. அதன்படி, கடந்த 24ம் தேதி இரவு ரம்யாவும் ரமேஷும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவர்கள் மீது இருசக்கர வாகனத்தை கொண்டு மோதியுள்ளார் சந்திரசேகர். இதில் தடுமாறிய ரமேஷை தாக்கி அவரின் கையை உடைத்து, தான்மறைத்து வைத்திருந்த பிளேட் மூலம் அவரின் கை, கழுத்து, தலை பகுதிகளை தாக்கி விட்டு தப்பியோடியிருக்கிறார் சந்திரசேகர்.
இதில் காயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சீரியல் நடிகை தனது கணவரை கொல்ல நண்பர் மூலம் திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதையடுத்து துணை நடிகை ரம்யா மற்றும் சந்திரசேகரை கைது செய்த கோவை மதுக்கரை போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சீரியல் நடிகை ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.