தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் - வேலையைப் புறக்கணித்தும், பேரணியாகச் சென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வெறிச்சோடிய அலுவலகங்கள்
Mar 28 2023 2:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையைப் புறக்கணித்தும், பேரணியாகச் சென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அலுவலகங்கள் வெறிச்சோடியுள்ளன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே, சேலம் மாவட்டத்திலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சித் துறை, பத்திரப்பதிவுத்துறை, நீதிமன்ற பணிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் போராட்டத்தால் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான அரசு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. இதனால் முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் 2,500 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் இல்லாமல் நாற்காலிகள் காலியாகவும், வெறிச்சோடியும் காணப்பட்டு வருவதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.