குன்றத்தூர் அருகே செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை - துக்கம் தாளாமல் அதே கயிற்றில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்
Oct 6 2022 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். மகன் இறந்த துக்கம் தாளாமல் அதே கயிற்றில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் நவீன்குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். நவீன் குமார் அதிக நேரம் செல்போனில் விளையாடியதை சுந்தர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த நவீன் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை சற்றும் எதிர்பாராத சுந்தர், தன்னால் தனது மகன் இறந்து விட்டானே என்ற அதிர்ச்சியில், கத்தியால் கையை அறுத்து கொண்டும், அதே கயிற்றில் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் போலீசார், தந்தை, மகன் இருவரின் உடல்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.