அதிமுக-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையே தொடரும் : இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Aug 18 2022 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ், தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இ.பி.எஸ். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தொண்டர்களும், நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்து திரு. ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி திரு.ஜெயசந்திரன் நேற்று தீர்ப்பு வழங்கினார். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவும், அதில் இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என தீர்ப்பளித்தார். வரும் காலங்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கேட்டு கொண்டால் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அதிமுகவில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.