கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர் வீட்டில் வருமான வரி சோதனை - வரி ஏய்ப்பு புகாரின் பேரில் வருமான வரித்துறை நடவடிக்கை
Jul 6 2022 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவரான சந்திரசேகருக்கு தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் அதிமுக இளைஞரணியில் கோவை மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் அவர் உள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்படும் அவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து வேலை செய்துள்ளார். இவரது மனைவி சர்மிளா சந்திரசேகர் கோவை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரசேகரின் தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சந்திரசேகர் வீட்டில் காலை 11 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் மற்றும் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய போது, சந்திரசேகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் முறைகேடுகள் தொடர்பாக சந்திரசேகர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.