லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் பஞ்சு மற்றும் நூல் விலையேற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என, அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதோடு, பதுக்கலில் ஈடுபடுவோரையும் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நூல் விலை தற்பொழுது கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஒரு வருட காலமாக தொடர்ந்து விலை உயர்ந்து வருவது மிகவும் கவலையடைய செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், திருப்பூரில் பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலில் ஈடுபடுவோர், மிகவும் பாதிப்படைந்துள்ளனர் - பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து, ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தினர் தற்பொழுது தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்து, போராடி வருகின்றனர் - இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 7 முதல், 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நூல் விலை ஏற்றத்தை வாய்ப்பாக பயன்படுத்தி, ஒரு சிலர், பஞ்சு மற்றும் நூல் பதுக்குவதால், நூல் கிடைப்பதிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் கவலை தெரிவிப்பதாக சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்று பஞ்சு மற்றும் நூல் பதுக்கலில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மத்திய அரசை, புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த நூல் உற்பத்தியில், 50 சதவிகித அளவு நூல் உற்பத்தி, தமிழகத்தில் நடைபெறுவதால், இத்தொழிலை நம்பி இருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்பொழுது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
பஞ்சுக்கான 11 சதவீத இறக்குமதி வரியை, வரும் செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது - இருந்தும் பஞ்சு மற்றும் நூல் விலை குறைந்தபாடில்லை என்று நூல் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிப்பதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த நூல் தட்டுப்பாடு சரியாகும்வரை, நூல் ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்து, தங்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவேண்டும் என்றும் நூல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.
எனவே, மத்திய அரசு, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, பஞ்சு மற்றும் நூல் விலை ஏற்றத்தை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், பஞ்சு மற்றும் நூல் பதுக்கலில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை, புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.