விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 174 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிக ரத்து : 405 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
May 20 2022 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறையை மீறிய 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ள மாவட்ட ஆட்சியர், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்றவற்றை சேமித்தல் மற்றும் விற்பனை செய்வதை கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, மாவட்ட நிர்வாகம், பட்டாசு உற்பத்தி ஆலைகளை குழுக்கள் அமைத்து தொடர் ஆய்வு செய்ததில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிகளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இனங்களில் தொடர்புடைய 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.