தலைமைக் கழகத்திலேயே தொண்டர்கள் தாக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும், தொண்டர்கள் மீது விழுந்த அடி, தம் மீது விழுந்த அடியாகவே கருதுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும், நம் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்திருக்கிறது - நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைபடும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
என்றைக்கு, நம் புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்றுமுதல் இன்று வரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களை பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனைபடுகிறது - எந்தஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதித்து அவர்களுடைய நலனில் அக்கறை காட்டும்போதுதான், அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் அந்த இயக்கத்தின் மீது ஒரு நல்ல எண்ணமும், நம்பிக்கையும் வரும் - எந்தஒரு இயக்கத்திற்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள்தான் தேவையே ஒழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல என சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
திரு. ஓமபொடி பிரசாத் சிங், புரட்சித்தலைவரின் அன்பைப் பெற்றவர் - அது மட்டுமல்ல, திரு. பிரசாத் சிங், புரட்சித் தலைவர் கையால் தாலி எடுத்து கொடுத்தால்தான் தனக்கு திருமணம் என்று திருமண மேடையில் வெகுநேரம் காத்திருந்து, பின்னர் தலைவரும் இந்த எளிய தொண்டனின் அன்பால் கட்டுப்பட்டு திருமண மேடைக்கு வந்து தாலி எடுத்து கொடுத்தபின்னர் திருமணம் செய்து கொண்டவர் -
மேலும், புரட்சித்தலைவர் கட்சி தொடங்கிய சிறிது காலத்தில் மீண்டும் திமுகவோடு இணைவதற்காக பேச்சுவார்த்தையில் இருந்த வேளையில் திரு. பிரசாத் சிங், திரு. முசிறிப்புத்தன் ஆகியோரை திமுகவினர் தாக்கியதை பார்த்தவுடன், திமுகவுடன் மீண்டும் சேர்வது என்ற முடிவை கைவிட்டுவிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து வழி நடத்தி வெற்றி கண்டவர் என சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, எளிய தொண்டரான திரு. பி. ராஜேஷ், தலைமைக் கழகத்திலேயே தாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது - இன்று, நம் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடுதான் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் - புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் கட்டி காத்த இந்த இயக்கத்தை சீரழித்துவிடாதீர்கள் - இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது என புரட்சித்தாய் சின்னம்மா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும், தம் மீது விழுந்த அடியாகவும்தான் நினைப்பதாக குறிப்பிட்டுள்ள சின்னம்மா, ஒரு தலைமையால்தான் அந்த வலியை உணரமுடியும் - ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும் - இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால்தான் வரும் நாட்களில், நம் எதிரிகளை வெல்ல முடியும் என்பதின் அவசியத்தை உணர்ந்தாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.