அ.இ.அ.தி.மு.க பொன்விழா ஆண்டு தொடக்கத்தையொட்டி புரட்சித்தாய் சின்னம்மா, தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், அம்மா வழியில் நின்று கழகத்தை காப்போம் என சூளுரைத்துள்ளார். தொண்டர்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும் என்றும், நாளைய நாள் நமக்காகட்டும் என்றும் மடலை தொடங்கியுள்ள பொதுச் செயலாளர் சின்னம்மா, நம் நற்பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர் பெறட்டும் என்றும், இதற்கான வெற்றி இலக்கை நோக்கி நம் கழகத்தை இயக்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா கண்ட வழியில்... புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளை பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால், மக்கள் மனம் வென்ற நம் புரட்சித் தலைவி அம்மாவின் பயணத்தை, நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகத்தை காப்போம் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா அழைப்பு விடுத்துள்ளார்.
ஒற்றுமைப் பூக்களை ஒன்றாய் குவிப்போம் - தமிழ்ச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணம் என்று மக்களுக்கு உரைப்போம் - புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா? என்றும் புரட்சித்தாய் வினவியுள்ளார். மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அ.இ.அ.தி.மு.க. நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும் - நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோமே என வேதனைபட்டுள்ள புரட்சித்தாய், இதுபற்றி சிந்திக்கவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எத்தனை எத்தனை இன்னல்களைக் கடந்த புரட்சித்தலைவி அம்மா சென்ற வழியில் தடையின்றி செல்ல உறுதி கொள்வோம் - தொண்டர்கள் நினைப்பது தமக்கு புரிகிறது - அவர்களின் தூய நெஞ்சமும் புரிகிறது எனவும் அந்த மடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கழகம் காக்கப்படும் - மக்களின் ஒற்றுமை உயிர் பெறும் - காலத்திற்காய்க் காத்திருப்பவன் ஏமாளி - காலத்தைக் கைப்பற்றுபவன் புத்திசாலி - அம்மாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகளன்றோ என சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார். கரம் கோர்ப்போம், அம்பாய்ப் பயணிப்போம், இலக்குகளைதொடுவோம், அயராது உழைக்க மனம் கொள்வோம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தை நம் கழகத்தின் கையில் கொண்டுவர சூளுரைப்போம் - அஞ்சாது உறுதியேற்போம் - மக்களாய் நாம் இருப்போம் - நமக்காக மக்கள் இருப்பார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
கழகத்தின் பாதையில் புரட்சித் தலைவர் காணாத சோதனையா?, புரட்சித்தலைவி அம்மா காணாத இடர்பாடா? - அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காத்த காலத்தை நாம் அறிவோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்பதை நாம் அறிந்ததுதானே - வெல்வோம் சகோதரர்களே - நான் இருக்கிறேன் என்பதை விட, நாம் இருக்கிறோம் - ஆதிக்கம் ஒருநாள் மக்களிடம் மண்டியிடும் என்றும் அம்மாவின் பாதையில் மக்கள் மனம் வெல்வோம் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பொன்விழா பிறக்கும் நாள், கழகத்தின் வரலாற்று புது நாளாகட்டும் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ள சின்னம்மா, தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைவியின் எத்தனை எத்தனை செயல்பாடுகள் மக்கள் வாழ்வை மாற்றிக்காட்டியுள்ளன - தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காக பயணிப்போம் - சங்கமிப்போம் - சந்திப்போம் என்றும் சின்னம்மா அழைப்பு விடுத்துள்ளார்.
கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது - வெற்றிப் பயணத்தை தொடர்வோம் என்றும், தொண்டர்களின் துணையோடும், மக்களின் பேராதரவோடும் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா, தொண்டர்களுக்கு எழுதிய மடலில் சூளுரைத்துள்ளார்.