சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல்
Oct 19 2021 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் - நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் - கேரள கடலோரப் பகுதி, மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.