தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் - மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
Oct 19 2021 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களில் போட்டிமிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலலிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலினை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப் போன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், தேர்தல் செலவு கணக்கு விவரத்தினை, உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை, தொடர்புடைய அலுவலரிடமிருந்து, வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது, சட்ட விதிகளின்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்களாக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.