வெப்பச்சலனத்தால் கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்யும் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Oct 19 2021 7:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெப்பச்சலனம் காரணமாக, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சோலையாறில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.