ஜெயங்கொண்டம் அருகே 3 மாத பெண் குழந்தை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அவலம் - தாய் தந்தை உட்பட ஐந்து பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை
Sep 22 2021 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெயங்கொண்டம் அருகே, குடும்ப வறுமை காரணமாக, 3 மாத பெண் குழந்தையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தாய், தந்தை உட்பட, ஐந்து பேரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் -மீனாதம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த மீனாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. நான்காவதாக பிறந்த அந்த பெண் குழந்தைக்கு சுபஸ்ரீ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில், சரவணன்-மீனா தம்பதியினர், அந்த பெண் குழந்தையை, ஒருவருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மனச்சநல்லூரை சேர்ந்த முத்தையன் ஆகியோர் மூலம், கோயமுத்தூரில் உள்ள ஒரு தம்பதியினருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூரில் இருந்து 3 மாத பெண் குழந்தையை மீட்ட போலீசார், தாய், தந்தை உட்பட 5 பேரை கைது செய்தனர். பெற்ற பெண் குழந்தையை, தாய், தந்தையே பணத்திற்கு விற்பனை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.