பில்லூர் அணை திறக்கப்பட்டதையொட்டி வெள்ள அபாய எச்சரிக்கை - கோவை வந்தடைந்தது தேசிய பேரிடர் மேலாண்மை குழு
Jul 23 2021 2:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் பில்லூர் அணை திறக்கப்பட்டதையொட்டி, வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்றும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், கோவைக்கு வந்தடைந்தனர்.
கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, அணையில் இருந்து 14 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீலகிரி மற்றும் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றுவதன் காரணமாக, பவானி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ள பாதிப்பில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணமும், வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்றும் வகையில், சென்னை, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மேட்டுப்பாளையத்துக்கு விரைந்துள்ளனர். 66 பேர் கொண்ட குழுவினர், பொது மக்களை மீட்பதற்கு உண்டான கருவிகள், மீட்பு படகுகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றனர்.
இதனிடையே, உதகை, கூடலூர் பகுதிகளில் மழை அதிகரித்து வருவதால் தேசிய பேரிடர் குழுவினைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். இவர்களில் ஒரு குழு உதகையிலும், ஒரு குழு கூடலூரிலும் தங்கியிருந்து வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.