தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் கொரோனா தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
Apr 22 2021 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ரெம்டெசிவர், ஆக்சிஜன் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தடுப்பு மருந்துகளின் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லி உட்பட நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது. அப்போது, தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் உள்ள 9 ஆயிரத்து 600 வெண்டிலேட்டர்களில் 5 ஆயிரத்து 887 வெண்டிலேட்டர்கள், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதாகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு 65 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கியதால் பாதிப்பு இல்லை என்றும் குறிப்பிட்டது.
இதைகேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் ரெம்டெசிவர், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததுடன், மே 2 வாக்கு எண்ணிக்கை நாளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அவசர காலங்களில் துரிதமாக முடிவெடுக்க சுதந்திரமான சிறப்பு அதிகாரி குழுவை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். தடுப்பு மருந்துகளின் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென நீதிபதிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.