திருச்சியில் பேருந்து பயணத்தின் போது 2 வயது குழந்தையை தவறவிட்ட பெற்றோர் : போலீசார் மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைப்பு
Apr 22 2021 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் காணாமல் போன 2 வயது குழந்தையை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
திருவானைக்காவல் அருகே வசிக்கும் மோகன்ராஜ்-தனலட்சுமி தம்பதியினர், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து சென்னைக்கு பேருந்தில் ஏறியபோது தங்களது 2 வயது குழந்தையை தவறவிட்டனர். விழுப்புரத்தில் இறங்கி உணவு சாப்பிடும்போது குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தந்தை மோகன்ராஜ், திருச்சியில் உள்ள தனது உறவினர் கார்த்தி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர், சமயபுரம் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்திற்கு சென்று விசாரித்தபோது, குழந்தை கதிர்வேல், கொள்ளிடம் காவல் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. பின்னர் காவல் நிலையத்திற்கு சென்ற அவரிடம், திருச்சியில் உள்ள குழந்தைகள் நல உதவி மையத்தில் குழந்தை இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் நல உதவி மைய பணியாளர்கள் மூலம் குழந்தை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.