சென்னை தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் - மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் உட்பட ஐந்து பேர் கைது
Apr 22 2021 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் அருகே துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபரை மீட்ட போலீசார், இது தொடர்பாக மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான சிவன், ராஜேஷ் கண்ணா, சம்பத் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜேந்திரா உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்காக உள்ள நிலங்களை பார்வையிட்டனர். அப்போது கண்டாச்சிபுரம் அருகே காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சிவன், ராஜேந்திரா ஆகிய இருவரையும் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. கடத்தி செல்லப்பட்ட ராஜேந்திரா என்பவரை உளுந்தூர்பேட்டை அருகே இறக்கி விட்டுவிட்டு, சிவனை மட்டும் அந்தக் கும்பல் கடத்தி சென்றது.
இதனைத்தொடர்ந்து, கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள பூத்தமேடு என்ற இடத்தில் கடத்தல் கும்பலை மடக்கி பிடித்து, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவனை மீட்டனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இரிடியம் வாங்கி தருவதாக கூறி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு 6 லட்சம் ரூபாயை வாங்கி கொண்டு சிவன் ஏமாற்றியதால், அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த ரவுடி ஒட்டக்காது செந்தில் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத் துப்பாக்கி, நகைகள் மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.