கார்த்திகை தீபத் திருவிழா - தமிழகம் முழுவதும் களைகட்டிய அகல் விளக்கு விற்பனை
Nov 28 2020 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகைத் தீபத் திருவிழா தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அகல் விளக்குகளுக்கான விற்பனை, களை கட்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் கார்த்திகை தீப திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், வீடு முழுவதும் விளக்கேற்றி பொதுமக்கள் வழிபடுவர். இதை முன்னிட்டு, அகல் விளக்குகளுக்கான விற்பனை மாநிலம் முழுவதும் களைகட்டியுள்ளது. தலைநகர் சென்னையில், பல்வேறு இடங்களில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. பாரம்பரிய விளக்குகள், வண்ண விளக்குகள், குபேர விளக்கு, அடுக்கு அகல் விளக்கு என பல வடிவங்களில் ஆயிரத்து 8 மாடல்களில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை
செய்யப்படுகின்றன. இவற்றை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், முக்கிய சாலைகளான பிரப் ரோடு, ஆர்.கே.வி.சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில், அகல் விளக்கு விற்பனை நடைபெற்று வருகிறது. ஐந்து முகம் கொண்ட விளக்குகள், வண்ண விளக்குகள் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.
நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அகல் விளக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது. ஒரு முக விளக்கு, 3 முக விளக்கு, 5 முக விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. துளசிமாட விளக்கு ஒன்று 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த சந்தை பகுதியில் மண்சட்டி விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. சாலையோரம் உள்ள கடைகளில், அகல் விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.