மெய்சிலிர்க்க வைக்கும் சிறுவனின் நினைவாற்றல் : செல்போன் எண், வாகன எண்களை மனப்பாடமாக கூறும் அதிசயம்
Nov 5 2020 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, 4ம் வகுப்பு மாணவனின் நினைவாற்றல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. செல்போன் எண்கள், வாகன எண்கள், 150-க்கும் மேற்பட்ட திருக்குறள், பாரதியார் பாடல்கள் என இச்சிறுவன் அனைத்தையும் மனப்பாடமாகக் கூறி அசத்தி வருகிறான்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை கிராமத்தைச் சேர்ந்த ரத்தினகுமார் - மகாலட்சுமி தம்பதியின் 2வது குழந்தையான குருவிஸ்வா, பிறவியில் வளர்ச்சி குறைபாட்டுடன் இருந்த நிலையில், தற்போது நினைவுத்திறனை வெளிப்படுத்துவதில் மிகுந்த ஆற்றலை பெற்றுள்ளான். செந்துறை கிராமத்திற்கே தொலைபேசி எண்களைக் கொண்ட நடமாடும் புத்தகமாகத் திகழ்கிறான். ஒருவரை ஒருமுறை சந்தித்து பெயர், ஊர், செல்போன் எண் என கேட்டு, அதை மனதுக்குள் 2 முறை சொல்லிக்கொள்ளும் குருவிஸ்வா, பின்னர் எத்தனை மாதங்கள் கழித்து கேட்டாலும் அதை அப்படியே கூறுகிறான். சிறுவனின் இந்த ஞாபகத்திறமை கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீடியோ கேம்களிலேயே பொழுதைக்கழிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு மத்தியில், குருவிஸ்வா, அடுத்தவரிடம் செல்போன் எண்ணை வாங்கி அதை மனதில் பதிவு செய்து, எப்போது கேட்டாலும் சொல்லி டெலிபோன் டைரியாகவே மாறியுள்ளான். சிறுவனின் நினைவாற்றலுக்கான காரணம் குறித்து அவனது தாயார் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். சிறுவனின் அபார நினைவாற்றலை, அக்கம்பக்கத்தினர் உளமார பாராட்டி வருகின்றனர்.
நினைவாற்றல் எனும் ஞாபகசக்தி மனிதர்களுக்கு மிக மிக அவசியம். அதனால் குழந்தைப் பருவத்திலேயே நினைவாற்றலை அதிகரிக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அதை பார்.. இதை செய்.. என்று பல விதங்களில் முயற்சி செய்யும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பயிற்சி எதுவும் பெறாமல் இயற்கையிலேயே பழுத்த பழமாய் நினைவுத்திறனில் சாதிக்கும் இந்தச்சிறுவன் மிகவும் பாராட்டுக்குரியவன்.