எதிர்மறை சிந்தனைகளை அகற்றி புதிய சாதனைகள் புரிவதற்கான பணிகளை தொடங்கிடுவோம் - தீயசக்திகளை வீழ்த்திட உறுதியேற்போம் - ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு டிடிவி தினகரன் வாழ்த்து
Oct 24 2020 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, புதிய சாதனைகள் புரிவதற்கான பணிகளை வெற்றித்திருநாளான விஜயதசமியில் தொடங்கிடுவோம் என்றும், தீயசக்தியை வீழ்த்திட உறுதியேற்போம் எனவும், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தொழிலையும், உழைப்பையும் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித்திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் இதுவரை காணாத பேரிடரில் இருந்து மெல்ல மீண்டு வருகிறோம் - முழுவதுமாக இதிலிருந்து வெளியில் வந்து பழைய இயல்பு வாழ்க்கையைப் பெறுவதற்கான உடல் மற்றும் மன ஆற்றல், அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளில் வழிபடுவோம் என தெரிவித்துள்ளார்.
அன்பின் வடிவமாக திகழ்ந்து அகிலத்தை காத்திடும் அன்னை பராசக்தியை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வடிவங்களில் 9 நாட்கள் வழிபட்டு, அதன் நிறைவில் அவரவர் தொழிலையும், தொழிலுக்கான கருவிகளையும் வணங்குவதே இந்நாளின் சிறப்பு - இந்த ஆண்டு அவரவருக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைவரின் தொழிலும், வாழ்வும் சிறந்திட வேண்டுமென மனப்பூர்வமான இறையருளை வேண்டுவோம் என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, புதிய சாதனைகள் புரிவதற்கான பணிகளை வெற்றித்திருநாளான விஜயதசமியில் தொடங்கிடுவோம் - தீயசக்திகளை வீழ்த்திட உறுதி ஏற்பதுடன், நல்லோருக்கும் நன்றி மறவாதோருக்கும் நானிலத்தில் எப்போதும் தனி மதிப்புண்டு என்பதை செயலில் காட்டுவோம் - அன்னை சக்தியின் அருளால் தமிழக மக்களுக்கு அத்தனை நலன்களும் கிடைத்திட அன்போடு வாழ்த்துவதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.