கொரோனா பரவல் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் தமக்கு வேதனையை அளிப்பதாகவும், விரைவில் தமிழக மக்களும் பிற மாநில மக்களும் நோய்த்தொற்றிலிருந்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என தியாகத்தலைவி சின்னம்மா தெரிவித்துள்ளார். தனக்கு சிறுநீரக கோளாறு என வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்றும், தான் வணங்கும் இறைவன் ஆசியோடும், அம்மாவின் ஆசியோடும் அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வழக்கறிஞர் திரு. ராஜா செந்தூர் பாண்டியனுக்கு சின்னம்மா தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தங்களுடைய 6-10-2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றதாகவும், அதன் மூலம் விவரங்களை அறிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் நலமாக இருக்கிறோம் - நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் - கொரோனா பரவல் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் தனக்கு வேதனையை அளிக்கின்றன.
கொரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதும் தனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும், பிற மாநில மக்களும் கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலுமாக மீண்டு சகஜநிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி கொள்கிறேன் என்றும் சின்னம்மா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 3 வது வாரத்தில் இருந்து நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எப்போது நேர்காணலுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாக தெரியவில்லை - கடிதத்தில் தாங்கள் குறிப்பிட்டபடி, "தனது நன்னடத்தை 'ரெமிஷன்' விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவு எடுப்பார்கள் என தான் நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரவு எனக்கு கிடைத்தவுடன் தங்களுக்கு தெரிவிக்கிறேன் -அதன்படி, அபராத தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும் என கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பிறகும், உச்சநீதிமன்றத்தில் 14-2-2017 தேசிய தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக 'கியூரேட்டிவ்' மனுவை தாக்கல் செய்ய இயலுமா? என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும், அதுபற்றி திரு.டி.டி.வி.தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும் என்றும் சின்னம்மா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தங்களின் கடித இணைப்பில் அனுப்பிய இணையதள செய்தியை படித்து பார்த்தேன் - தனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு இணையதள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது -உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷம பொய்ச் செய்தியை, உண்மை என நம்பி அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் - நான் வணங்கும் இறைவனின் ஆசியோடும், என் உடன்பிறவா அக்காவின் ஆசியோடும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் தான் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இணையதள செய்தி ஊடகத்தில், சமீபத்தில் ஜெய் ஆனந்த் தன்னை வந்து சந்தித்ததாகவும், பேசியதாகவும் தன் நிலையை பார்த்து அதிர்ந்து போனதாகவும், "அத்தை தாங்கள் பத்திரமாக வெளியே வந்தாலே போதும். தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டில், தாங்கள் இனி நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் - தங்களை எல்லோரும் மிகவும் புண்படுத்திவிட்டார்கள் - இனிமேல் வருகின்ற காலமாவது தாங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும்" என தன்னிடம் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில் ஒரு சதவீதம்கூட உண்மையில்லை - ஜெய் ஆனந்த் என்னை சந்திக்கவே இல்லை என்றும் சின்னம்மா விளக்கமாக தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தன் விஷயத்தில் அரசியல் குழப்பங்களை வேண்டும் என்றே ஏற்படுத்த எண்ணுபவர்கள், ஊடகங்கள் வாயிலாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தன்னை பற்றி தவறான செய்திகள் வெளியிடும் பட்சத்தில், உரிய சட்ட விளக்கத்தினை தன் சார்பாக தரவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை தனது சார்பாக எடுக்கவும் என, இக்கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.