வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 19 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தில் 9 சென்டிமீட்டரும், சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 7 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.