கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை - வரும் 19-ம் தேதி வரை பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு விற்பனை கடைகள் செயல்படாது என அறிவிப்பு
Jul 9 2020 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா அச்சம் காரணமாக, இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு விற்பனை கடைகள் செயல்படாது என்று பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. பட்டாசு தொழிற்சாலைகள் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும், 8 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில், நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால், தொழிலாளர்கள் நலன் கருதி, இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.