தந்தை மகன் கொலை வழக்கில் கைதான மேலும் 5 போலீசாரில் 3 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் - 2 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை
Jul 9 2020 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை-மகன் கொல்லப்பட்ட வழக்கில், மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் மூன்று பேர் தற்போது பேரூரணி சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேரை ஏற்கெனவே கைது செய்தனர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தான்குள காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, வெயில்முத்து, சாமத்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், பால்துரை, தாமஸ் ஆகியோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செல்லத்துரை, வெயில்முத்து, சாமத்துரை ஆகிய எஞ்சிய மூன்று பேர் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அம்மூவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இங்கு, காவலர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேலீசார் ஏற்கெனவே அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தந்தை மகன் இறப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து தொடுத்துள்ள வழக்கு, நீதிபதிகள் திரு. சத்தியநாராயணன் திரு.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வருகிறது.