தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Jul 5 2020 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக வடதமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் சின்னக்கலார், வால்பாறை, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், கோவை மாவட்டம் சோலையார், சின்கோனா, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.