சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் ஃப்ரெண்டஸ் ஆப் போலீஸுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகார் - மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை
Jul 5 2020 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் ஃப்ரெண்டஸ் ஆப் போலீஸுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்த நிலையில், தூத்துக்குடி உட்பட 13 மாவட்டங்களில் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்த நிலையில், அந்த அமைப்புக்கு தடை விதிக்கக்கோரி கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த தடை தடைவிதித்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் உத்தரவை பிறப்பித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், தூத்துக்குடி மாவட்டத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து, திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 6 மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலையங்களிலும், ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் செய்துவந்த பணிகளில், ஊர்க்காவல் படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.