தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்
Jul 3 2020 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சென்னையில் மட்டும், 2 ஆயிரத்து 82 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 2வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்தது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 721ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், சென்னையில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில், கொரோனா தாக்குதலுக்கு 64 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 385-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 ஆயிரத்து 357 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதை அடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 378-ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அரியலூர், பெரம்பலூரை தவிர்த்து 35 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 330 பேருக்கும், மதுரையில் 287 பேருக்கும், திருவள்ளூரில் 172 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. திருவண்ணாமலையில் 151 பேருக்கும், தேனியில் 126 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 121 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.