தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது
Jun 2 2020 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பிடியில், தலைநகர் சென்னை சிக்கித் தவித்து வருகிறது.
தமிழகத்தில் புதிய உச்சமாக, நேற்று ஒரே நாளில், ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 23 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 964 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதலால் நேற்று ஒரே நாளில் 11 பேர் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்தது. கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்த 413 பேர், நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 170 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் தொடர்ச்சியாக 2-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்து நூறை கடந்துள்ளது. கடந்த 27-ம் தேதியில் இருந்து, தொடர்ந்து 6 நாட்களாக, தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் உச்சத்தில் உள்ள மற்ற மாவட்டங்களான செங்கல்பட்டில் 48 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில், இதுவரை ஆயிரத்து 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் இதுவரை, 981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.