தமிழகத்தில் நாளைமுதல் 50% பேருந்துகள் இயக்கம் : பேருந்துகள் இயக்கத்திற்கான வழிமுறைகள் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
May 31 2020 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் நாளை முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து இயக்கத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும்போதும், பேருந்துகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், பயணிகளுக்கும் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், பேருந்துகளில் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் பேருந்தின் பின்படிக்கட்டுகள் வழியாக ஏறி, முன்படிக்கட்டுகள் வழியாக இறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நடத்துநர்கள்-ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தினந்தோறும் உடல்வெப்பநிலையை சோதிக்க வேண்டும் என்றும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு ஒரு பாட்டில் கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், தும்மல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் இருக்கும் பயணிகளுக்கு பேருந்தில் அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.