நளினி, முருகன் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
May 26 2020 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாட்ஸ்ஆப் மூலம் உறவினர்களிடம் பேச முருகன், நளினி ஆகியோரை அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில்,
இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், இங்கிலாந்தில் உள்ள மூத்த சகோதரியிடமும் வாட்ஸ் அப் வீடியோ கால்மூலம் தினமும் 10 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கும்படி கோரப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் திரு. எம்.எம். சுந்தரேஷ் மற்றும் திருமதி பி.டி. ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறையில் இருக்கும் நளினி, முருகன் ஆகியோர் வாட்ஸ்-அப் மூலம் உறவினர்களுடன் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை? உள்ளது என கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து வரும் வியாழக் கிழமைக்குள் அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் அன்றைய தினம், இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.