சென்னையில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் : சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர் சந்திப்பு
Apr 9 2020 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்ற கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் பதற்றமான பகுதியாக இதுவரை ஏதும் கண்டறியப்படவில்லை எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் தொடங்கப்பட்டன. சென்னை கே.கே. நகரில் இதனை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். முதல் கட்டமாக 5 ஆயிரம் நடமாடும் கடைகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களை, அவர்களின் வீடுகளுக்கு சென்ற கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். சென்னையில் கொரோனா தொற்று அச்சப்படும் சூழலில் இல்லை என்றும், நோய்த் தொற்றை மறைக்காமல் சிகிச்சை பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.