விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா தொற்று நோயாளி : தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
Apr 9 2020 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா தொற்று நோயாளியை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை எனக் கூறி, மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் 4 பேருக்கும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்ததால் மருத்துவர்களும், சுகாதாரத் துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 பேரை, அவர்களது வீட்டிற்கு சென்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அழைத்து வந்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மற்றொரு நபரான டெல்லியைச் சேர்ந்த 30 வயதான வாலிபர் நிதின் ஷர்மா என்பவர் மாயமானதால், சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதாக டெல்லி வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டெல்லியில் இருந்து வந்த நிதின் ஷர்மா, புதுச்சேரிக்கு வந்து தங்கியிருந்ததும், குற்ற வழக்கில் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.