கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு - ஏற்கெனவே இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு
Mar 28 2020 2:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 66 வயது முதியவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். சமீபத்தில் ஊர் திரும்பிய அவர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் கன்னியாகுமரி மாவட்டம் ஆசரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறித்த மருத்துவ பரசோதனை அறிக்கை இன்னும் வெளிவராத நிலையில் இன்று அவர் திடீரென உயிரிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அடுத்த சில மணிநேரத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த திருவட்டாரை சேர்ந்த 24 வயது இளைஞர் மற்றும் முட்டத்தை சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தது. இந்நிலையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.