பொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனை அறிவிப்பு - 2 முறை தேர்வு எழுத தடை
Feb 28 2020 9:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுத் தேர்வில், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள், அடுத்த 2 முறை தேர்வு எழுத முடியாது என தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் பள்ளி பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு, வழங்கப்படும் தண்டனைகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நடைபெறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில், காப்பி அடித்தல் போன்ற முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள், அடுத்த 2 முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பாக வினாத்தாளை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டால், 3 ஆண்டுகளுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்றும், தேர்வு அறையில் விடைத்தாள்களை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டால், 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால், ஆயுள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.