டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு - இடைத்தரகர்களான ஜெயக்குமார், ஓம்காந்தனிடம் விசாரணையை தீவிரப்படுத்தியது சி.பி.சி.ஐ.டி
Feb 21 2020 8:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில், முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரையும் ராமேஸ்வரத்தில் முறைகேடு நடைபெற்ற தேர்வு மையங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப்-2ஏ மற்றும் விஏஓ தேர்வு முறைகேடு வழக்குகளில் இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தூத்துக்குடி சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஐயப்பன் என்பவர் சரணடைந்தார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரும் அடுத்த கட்ட விசாரணைக்காக ராமேஸ்வரம் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரும் ராமேஸ்வரத்திலிருந்து விடைத்தாள்களை சென்னைக்கு கொண்டுச் சென்றபோது, மதுரை மாவட்டம் மேலூர் நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தி விடைத்தாள்களை மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால், ராமேஸ்வரம் செல்லும் வழியில் மேலூர் நெடுஞ்சாலையில், முறைகேடு நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, சுமார் 5 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விடைத்தாள்களை மாற்றியது எப்படி என்பது குறித்து இருவரையும் நடித்துக் காட்டச் சொல்லி விசாரித்தாக தெரிகிறது.
இதையடுத்து, அவர்களை ராமேஸ்வரத்தில் முறைகேடு நடந்த தேர்வு மையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தேர்வு மையங்களில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது எப்படி என்பது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.