தமிழகம் முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடரும் போராட்டம் : சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
Feb 21 2020 7:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சி.ஏ.ஏ., என்.ஆர்.பி., என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில் 8-வது நாளாக இன்று போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவல்துறையினர் நடத்திய தடியடியைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, செங்கை அனைத்து கிறிஸ்தவ மற்றும் பல்சமய கூட்டமைப்பு சார்பில், 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சி.ஏ.ஏ. சட்டத்தை திரும்பப்பெறும் வரை தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியில், இஸ்லாமியப் பெண்கள் உட்பட ஏராளமானோர், 8வது நாளாக இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசல் வளாகத்தில் 4வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.