சிறப்பு வேளாண் மண்டல மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் - தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு
Feb 20 2020 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி இன்று தாக்கல் செய்த 'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல்' மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்ட மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தி.மு.க வெளிநடப்பு செய்தது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவு மூலம், டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வுக்கு தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது, ஒருங்கிணைந்த எஃகு ஆலை, அலுமினிய உருக்காலை, விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, ப.கீரபாளையம், பரங்கிப்பேட்டை,குமராட்சி பகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்களிலும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. இதேபோல், கரூர், அரியலூர் மாவட்டங்களும் இடம்பெறவில்லை.