குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர். காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணிவரை நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. போராட்டம் நிறைவடையும்போது தேசியகீதம் பாடி போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் NRCக்கு எதிராக தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, தமிழக அரசை வலியுறுத்தி, மதுரை ஜமாத்துல் உலாமா சபை மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர், உலக தமிழ் சங்கத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கண்டன பேரணி மற்றும் ஆர்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் தேசியக் கொடியுடன் கலந்துக்கொண்டு, கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள 60 அடி சாலையில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில், கூட்டமைப்பின் செயலாளர் திரு. மவுலான ஹபிபுல்லா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்-புதுச்சேரி ஜமாத் உலமா சபை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டனர்.
ஈரோட்டில், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக காலிங்கராயன் விருந்தினர் இல்லத்திலிருந்து, பெருந்துறை சாலையில் பேரணியாகச் சென்றவர்களை, ஆட்சியர் அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸலாமியர்கள் கலந்து கொண்டனர். 750 மீட்டர் நீளம் கொண்ட தேசியக் கொடியினை ஏந்தியபடி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வேலூரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த இஸ்லாமியர்கள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைடுத்து சாலை ஓரமாக நின்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில், நாகர்கோவிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இதில் பங்கேற்றனர்.
ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.